Sunday, September 21, 2014

FeTNA 2015 தமிழ்விழா - அறிமுககூட்டம்

FeTNA 2015 தமிழ்விழா  அறிமுககூட்டம் செப்டம்பர் மாதம் 21ம் தேதி 2014ம் ஆண்டு மாலை 3 மணி முதல் 6 மணி வரை பிரிமாண்ட் நகரம் சென்டர்வில்லெ சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை தலைவர் திரு.நாஞ்சில் பீற்றர் அவர்களும் வாஷிங்டன் தமிழ்சங்கத்தை சேர்ந்த  திரு பாலகன் ஆறுமுகசாமி  அவர்களும் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்துக்கு வளைகுடா பகுதி தமிழ் ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பெருந்திரளாக கலந்து கொண்டனர். .வளைகுடா பகுதி தமிழ் மன்ற தலைவர் திரு சோலை அழகப்பன் அவர்கள் இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார். வாசிங்டன்னிலிருந்து வந்திருக்கும் சிறப்பு விருந்தினருக்கு நன்றி தெரிவித்தார்.இந்த விழாவின் லாபத்தில் ஒரு பங்கு வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின் நீண்ட நாள் கனவாகிய தமிழ் கலாச்சார மையம் அமைக்க செலவிடப்படும் என்பது குறிப்பிட தக்கது.


திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள் முதல் முதலாக பேரவையின் ஆண்டு விழாவை வளைகுடா பகுதியில் நடத்துவதும், தமிழ்நாடு அறகட்டளையுடன் இணைந்து நடத்துவதையும் பேரவையின் வரலாற்றில் ஒரு மைல் கல் என்று கூறினார். இதற்கு முன் நடந்த பெட்னா விழாக்களிலிருந்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.நுணுக்கமான நிதி திட்டமிடல் மூலம் இந்த விழாவை வெற்றி விழாவாக நடத்தலாம் என்று கூறினார்.இதற்கு முன் நடைபெற்ற பேரவை விழாக்களில் மிக பெரியதானது பேரவையின் வெள்ளி விழா என்றும் அந்த விழாவிற்கு 2500 பேர் வந்ததாகவும் , அடுத்த ஆண்டு சிலிக்கன் வாலியில் நடக்க இருக்கும் இந்த விழாவில் அதை விட மிக அதிக மக்கள் கலந்து கொள்ளும் விழாவாக இதை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.விழாவிற்கு  வரும் சிறப்பு விருந்தினர்களை வரவிற்கு ஏற்றவாறு செலவு செய்து தேர்வு செய்து கொள்ளலால் என்றார்.பொதுவாக இந்த விழாவிற்கு வருகை தரவிருப்பமில்லாதவர்களால் பெரும்பான்மையாக கேட்கபடும் கேள்வி சினிமா நட்சத்திரங்களை ஏன் அழைக்க படுகிறார்கள் என்பது தான் எனவும், இந்த நிகழ்ச்சி சினிமா நட்சித்தரங்களுக்காக மட்டும் நடத்த படும் நிகழ்ச்சி அல்ல என்றும் தமிழர்களின் வாழ்வியலில் ஒன்றற கலந்து விட்ட சினிமா துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பல மணி நேர நிகழ்ச்சிகளில் ஒரு சில மணி துளிகளே அவர்களது பங்களிப்பு இருக்கும் என்றும் கூறினார்.இந்த விழாவை வெற்றி விழாவாக நடத்த தன்னால் ஆன அனைத்து உதவியும் செய்வதாகவும் உறுதி அளித்தார்.விழாவிற்கு அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமிலிருந்து வரும் பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்களை சிறப்பாக விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்றும் வளை குடா தமிழ்மக்களிடம் விருப்பம் தெரிவித்தார்.

அடுத்து பேசிய திரு பாலகன் ஆறுமுகசாமி அவர்கள்  வளைகுடா பகுதி மக்களை ஊக்குவிக்கும் படியாக பேரவை விழாவை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்று பேசினார். அமெரிக்காவில் உள்ள தமிழர்களின் ஒற்றுமையின் அவசியத்தையும் , தொடர்ந்து நாம் என்ன செய்யவேண்டும் என்றும் விளக்கினார். விழா மேடையிலேயே $5000 நன்கொடையாக கொடுத்தார்.


அடுத்து பேசிய  விழா ஒருங்கிணைப்பாளர் திரு தில்லை குமரன் அவர்கள் பல்வேறு நன்கொடையாளர் பிரிவு, குடும்ப மற்றும் தனி டிக்கெட் பிரிவு பற்றி விளக்கினார். விழாவை சிறப்பாக நடத்த அமைக்க படும் பல்வேறு குழுக்கள் பற்றி விவரித்தார். விழாவிற்கு வந்தவர்களிடம் தாங்கள் விரும்பும் எந்த குழுவிலும் தன்னார்வலராக சேர அழைப்பு விடுத்தார்.இந்த நிகழ்ச்சியை வெற்றி விழாவாக நடத்த நிதி திரட்டுவதன் அவசியம் பற்றி கூறினார்.திரு ஜெயவேல் முருகன் அவர்கள் $5000  விழா  ஒருங்கிணைப்பாளரிடம்  நன்கொடை அளித்தார்.
பல்வேறு அலுவலங்களில் தாம் அளிக்கும் பணத்துக்கு ஈடாக கம்பெனியும் நன்குடை அளிப்பதால் , இந்த வாய்ப்பு உள்ள அனைத்து அலுவலகங்களிலும் வெலை செய்வோர் அந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்கொடைகளை கொடுக்கும் படியும் கூறினார்.இந்த வருடம் இளைஞர்களை கவரும் விதமாகவும் இளைஞர்கள் பங்களிப்பு அதிகம் இருக்கும் படியும் நிகழ்ச்சிகள் இருக்கும் என்றும் உறுதி அளித்தார். அது மட்டுமின்றி சன் டிவியின் கல்யாண மாலை நிகழ்ச்சியும் இவ்விழாவில் நடைபெறும் என்றும் கூறினார்.

அதை தொடர்ந்து தொழிற்முனைவோர் நிகழ்ச்சி அமைப்பாளர் திரு லேனா கண்ணப்பன் அவர்கள் தொழிற் முனைவோருக்காக நடக்க உள்ள நிகழ்ச்சி பற்றி கூறினார்.இவ்விழாவிற்காக நிதி திரட்டுவதில் இந்த நிகழ்ச்சி முக்கிய பங்காற்றும் என்று கூறினார்.  கூகுள், மைக்ரோசாட், ஆப்பிள், அமேசான் போன்ற நிறுவனங்களின் முக்கிய தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பேச அழைக்க பட உள்ளதாகவும்,  தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி, தமிழ் அமெரிக்க சாதனையாளர்கள் கவுரவிக்கும் விழா , ஸ்டான்போர்டு பல்கலைகழக பேராசியர்கள் உறை என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடல் நடந்து வருவதாகவும் கூறினார்.
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக  Innovative Start Up போட்டியை Venture Capitalist நடுவராக கொண்டு நடத்த பட  உள்ளதாகவும் வெற்றியாளருக்கு தொழில் தொடங்க  Seed Moneyயை Venture Capitalist  பரிசாக கொடுக்கும் படி திட்டமிட்டு வருவதாகவும் கூறி உள்ளார்.


வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின் முன்னாள் தலைவர்கள் இந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.இவ்வாழாவில் சிறப்பான நாடகத்தை திருமதி பகீரதி அவர்கள் நடத்த உள்ளதாக  அறிவிக்க பட்டது. அவர்  பேசும் போது உலக தமிழறிஞர்கள் கூடும் நிகழ்ச்சி வளைகுடா பகுதியில் நடக்க வேண்டும் என்ற கனவு இந்த நிகழ்ச்சியின் மூலம் மெய்பட்டது என்று கூறினார்.


நூறுக்கும்  மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டதால் இந்த சமுதாய கூடம் முழுதும் நிரம்பி வழிந்தது. இதன் மூலம் வளைகுடா பகுதி மக்களின் ஆர்வமும், வேகமும் கொண்டு இவ்விழாவை வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டது.

இவ்விழாவிற்கு தன்னார்வலராக பணி புறிய மற்றும் இவ்விழா பற்றிய தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்ய  coordinator@fetna.org என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.



No comments:

Post a Comment