Sunday, December 21, 2014

பேரவையின் தமிழ் விழா ஒரு அறிமுகம்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை என்பது  வட அமெரிக்காவில் உள்ள பற்பல தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும்.  ஒவ்வொரு ஆண்டும் இந்த பேரவையின் ஆண்டு விழாவை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று தங்களது நகரத்தில் நடத்தி வருகிறது. உலகெங்கிலுமிருந்து இயல், இசை, நாடகம் மற்றும் சினிமா துறையை சார்ந்த பல்வேறு கலைஞர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு முத்தமிழில் இனிமையான விருந்து படைப்பர். வட அமெரிக்காவின் பல பகுதியிலிருந்தும் தமிழர்கள்  இந்த நிகழ்ச்சியை கண்டு களிப்பதோடு , தமிழ்ச் சொந்தங்களோடு உறவாடவும் ஒரு வாய்ப்பாகவும் கருதி தொடர்ந்து வரும் வண்ணம் உள்ளனர். பேரவையின் வரலாற்றில் முதல் முதலாக பேரவையின்  ஆண்டு  விழாவை நமது வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், தமிழ்நாடு அறகட்டளையுடன் சேர்ந்து மேற்கு கடற்கரையோரம்  சான் ஓசே நகரில்  2015ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை   நடத்த முடிவு செய்து அதற்கான பணிகள் தன்னார்வ தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு நடந்து வருகிறது.

தமிழ்நாடு அறகட்டளை  (TNF -Tamilnadu Foundation) மற்றும்  அமெரிக்க தமிழர் மருத்துவர் அமைப்பு (ATMA - American Tamil medical Association) ஆகியோரும் இவ்விழாவினை கலந்து சிறப்பிக்க முன்வந்துள்ளார்கள்.இந்த விழாவில் கிடைக்கும் லாபத்தின் ஒரு முக்கிய பகுதி நமது வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின் தமிழ்ப் பண்பாட்டு மையம் தொடங்க  பயன்பட போகிறது என்பதும் குறிப்பிட தக்கது.

விழாவின்  அமைப்பு

இரண்டு நாட்கள் முழுமையாகவும் முதல் நாள் மற்றும் கடைசி நாள் பகுதி பொழுதிலும் இந்த விழா நடைபெறும். ஜூலை மாதம் 2ம் தேதி மாலை  உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும்  சிறப்பு விருந்தினருடன் இரவு சிறப்பு விருந்து  மற்றும் அளவளாவல் நடைபெறும். இந்த விருந்தில் விழாவிற்கு நன்கொடை அளித்த அனைவரும் இலவசமாக  கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ள பிறர் சிறப்பு கட்டணம் கொடுத்து அனுமதி சீட்டு வாங்கி கொள்ளலாம். ஜூலை மாதம் 3 மற்றும் 4 தேதிகளில் சான் ஒசே நகரிலுள்ள சிவிக் அரங்கில் காலை முதல்  இரவு வரை  முழுமையாக முதன்மை மற்றும் இணை அரங்குகளில் அனைத்து தரப்பு மக்களின் ரசனைகளையும் நிறைவுச் செய்யும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜூலை 5 ம் தேதி சிறப்பு விருந்தினர்களுடன் இலக்கியச் சந்திப்பு நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம். தமிழகத்திலிருந்து வந்திருந்த பெரும்பான்மையான கலஞர்களும், அறிஞர்களும் தமிழுக்காக இலக்கியத் தரம் மற்றும் மனதைக் கவரும் நிகழ்ச்சிகளை கொண்டு நடைபெறும் இது போன்ற நிகழ்ச்சி உலகில், ஏன் தமிழத்தில் கூட நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது,

விழாவின் சிறப்பு

பொதுவாக அமெரிக்காவில் நடக்கும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒரு சில மணி நேரங்கள் நடந்து   இலக்கியம், இசை, சினிமா என எதாவது ஒரு விருப்பத்தை நிறைவுச் செய்வதாகவே இருக்கும். அவ்விழாவிற்கான சிறப்பு விருந்தினரும் ஒரு சிலரே இருப்பர். குடும்பத்தோடு விழாவிற்கு செல்லும் போது அந்த நிகழ்ச்சியும் குடும்பத்தில் ஒரு சிலரின் விருப்பத்தை மட்டும்  நிறைவுச் செய்வதால் அந்த நிகழ்ச்சியில் விருப்பம் இல்லாதவர்கள் மற்றவர்களின் விருப்பத்திற்காகச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் பேரவை  விழா என்பது தமிழ் இலக்கியம், தமிழ் இசை,  கர்நாடக (தமிழ்) இசை, ஆன்மீகம்,தொல் தமிழ் இசை (பறை போன்றவை), பரத நாட்டியம், தொல் தமிழ் கலைகள், நவீன நாடகம் மற்றும் தொல் தமிழ் நாடகம் (கூத்து,நாட்டிய நாடகம் போன்றவை), தமிழ் ஆர்வலர் மற்றும் உணர்வாளர்   சார்ந்த நிகழ்ச்சி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சி, தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சி  , திரைப்பட ஆர்வலர்களுக்கான நிகழ்ச்சி என அனைத்து தரப்பு மக்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் விதத்தில் சுமார் 80 மணி நேரத்திற்கும் மேலான நிகழ்ச்சி நடைபெறும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் முக்கிய மற்றும் பல இணை அரங்குகளில்  ஒரே நேரத்தில் இணையாக நடந்து கொண்டிருப்பதால் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியை தேர்வு செய்து  விருப்பமான நிகழ்ச்சியை மட்டும் கண்டுகளிக்களாம். பெரும்பான்மையான நிகழ்ச்சிகள் ஒரே அரங்கில் வெவ்வேறு அறைகளில் நடைபெறுவதால் ஒரே குடும்பம் அல்லது குழுவை சேர்ந்தவரக்ள் தங்களுக்கு பிடித்து அரங்குகளில் என்று நிகழ்ச்சியை பார்த்து விட்டு பிறகு எளிதில் ஒன்று கூடி விடலாம்.தமிழகம் மற்றும் உலகெங்கிலிருந்து தமிழ் இலக்கியம்  மற்றும் திரைபடத்துறை  சார்த்த பல்வேறு பிரபலங்கள்  மிக பெரிய அளவில் வந்து கலந்து கொள்வார்கள்.

கடந்த விழாக்களில் கலந்து கொண்ட சிலர்: நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், நாசர், விக்ரம், கார்த்தி, சிவகுமார், மனோரமா; இசையமைப்பாளர்கள் இளையராஜா, பரத்வாஜ், பாடகர்கள், TM சௌந்திரராஜன், சுசீலா, வாணி ஜெயராம், SP பாலசுப்ரமணியம், சங்கர் மகாதேவன், கிரிஷ், சின்மன்யி போன்ற பலர்;  பாடலாசிரியர்கள் தாமரை, குட்டிரேவதி, வைரமுத்து, அறிஞர் பெருமக்கள் பிரபஞ்சன், இளங்குமரனார் அய்யா; 2003 விழாவைத் துவக்கி வைத்தவர் இந்திய குடியரசு தலைவர் மேதகு முனைவர் அப்துல் கலாம் அவர்கள். அரசியல்வாதிகளான அய்யா நல்லகண்ணு, மகேந்திரன், இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், சீமான், மேலும் பலர் பேரவை விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

அது மட்டுமன்றி புலம் பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறி அறிவியல்,தொழில் நுட்பம், தொழில் மற்றும்  கலை துறைகளில் சாதனை படைத்த தமிழர்களை சிறப்பிப்பதோடு அவர்கள் மூலம் இளம் தலைமுறையினருக்கு சாதனைகள் செய்ய ஊக்க படுத்தவும் படுகிறது. உலகில் பெரும்பான்மையான  மாபெரும் தொழில் நுட்ப நிறுவனங்களை விதையாக இடபட்டு ஆலமரமாக வளர்ந்திருக்கும் சிலிக்கன் பள்ளத்தாக்கில் நடைபெறும் இந்த விழாவில் தொழில் முனைவோர்களுக்காவும் , தொடக்க நிலை தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கும், உயர்நிலை பள்ளி மற்றும் கல்லூரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ஊக்குவிப்பதோடு அதற்கு தேவையான தகவல்களை தரவும் , முன்னனி தொழில் நிறுவனங்களின் உயரதிகாரிகள் ,ஸ்டான்போர்டு போன்ற பலகலை கழக பேராசிரியர்கள், முதலீட்டாளர்கள், வெற்றிகரமாக தொழில் தொடங்கி நடத்தி வருபவரகள்  என அனைத்து தரப்பினர்களையும் கொண்டு ஒரு நாள் முழுக்க நிகழ்ச்சி நடத்துவதோடு Busines Networking செய்யவும் திட்டமிடபட்டுள்ளது. நீங்கள் தொழில் முனைவோராகவோ  , துவக்க நிலை தொழில் தொடங்குவோராகவோ, அதை விட முக்கியமாக இடைநிலை/உயர் பள்ளி அல்லது பல்கலைகழகம் படிக்கும் குழந்தைகளின் பெற்றோராக இருந்தால், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு  நிச்சயமாக இந்த நிகழ்ச்சியில்   கலந்து கொள்ளவேண்டும்.

பொதுவாக வளைகுடா பகுதியில் ஒருசில மணிநேரம்  நடைபெறும் மெல்லிசை நிகழ்ச்சியை காண மிக பெரிய அளவில் பொருள் செலவு செய்து செல்கிறோம். இந்த பேரவை விழாவிலோ 80 மணி நேரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளை கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி செய்வதோடு மட்டும்  அல்லாமல் ஜூலை மாதம் 4ம் தேதி மாலையிலிருந்து நள்ளிரவு வரை தமிழகத்திலிருந்து வரும் பிரபலமான பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களை கொண்டு மாபெரும் மெல்லிசை விருந்தும் படைக்க பட உள்ளது. விழாவிற்கான டிக்கெட்டின் விலையிலேயே இந்த மெல்லிசை நிகழ்ச்சிக்கான அனுமதியும் இலவசம். இத்தனை சிறப்பான நிகழ்ச்சிகளையும் குறைந்த விலையிலேயே காண உடனே ஜூலை மாதம்  3 மற்றும் 4 ம் தேதியை உங்கள் காலண்டரில் இப்போதே குறித்து வைத்து கொள்ளுங்கள்.

இவ்விழாவிற்கான டிக்கெட்டுகளை வாங்க, இந்த விழா பற்றிய குறிப்புகள் மற்றும் கலந்து கொள்ளவுள்ள பிரபலங்கள் பெயர்களை அறியவும் அவ்வப்போது www.fetna2015.org  என்ற வலை தளத்துக்கும் என்ற  www.fetna2015.blogspot.com வலைமனையிற்கும் அடிக்கடி வருகை தாருங்கள்.

இவ்வளவு பெரிய விழாவை நடத்துவதற்கு  டிக்கெட் வாங்குவதற்கு பதில் சிறிது அதிகம் பணம் கொடுத்து நன்கொடையாளராக இருந்து விழாவை வெற்றிகரமாக நடத்த  உதவி செய்வதோடு நன்கொடையாளர்களுக்கான சிறப்பு  சலுகையான பிரபலங்களோடான இரவு விருந்து போன்ற சலுகைகளையும் அனுபவிக்க தவறாதீர்கள்.



இந்த ஒரு அரிய வாய்ப்பு இது வரை மேற்கு கடற்கரையில் வாழும் தமிழர்களுக்கு கிட்டவில்லை. எனவே இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இணைந்து இவ்விழாவை வெற்றியடைய அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

Wednesday, December 17, 2014

FeTNA 2015 - தொழில்முனைவோர் குழுவின் முதல் கூட்டம்


தொழில் முனைவோர் குழுவின் முதல் கூட்டம் திரு லேனா கண்ணப்பன் தலைமையில் சென்ற சனிகிழமை அன்று சான்ராமோன் நகரில்  நடைபெற்றது. 15க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை கூறி தொழில்முனைவோர் கருத்தரங்கு செம்மையாக நடைபெறவும் நிகழ்ச்சி நிரலை வலுபடுத்தவும் விவாதித்தனர்.  தொழில் முனைவோர் கருத்தரங்கு கீழ் காணும் நான்கு தலைப்புகளில் இணையரங்குகளில் நடைபெற விவாதிக்க பட்டது.

இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆர்வலருக்கு Start-up போட்டி மற்றும் பரிசுகள்

  1. Entrepreneur committee Key note speakers
  2. Startup - Education/Discussion
  3. TAP Awards


இந்நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவித்து அவர்கள் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யபட்டது. முக்கியமாக மாணவர்களுக்கு

1.ஒரு தொழில் துவங்கும் எண்ணம் மட்டும் இருந்தால் அதை சந்தையின் தேவை, பொருளாதார கணக்கீடுகள் , அதே துறையில் உள்ள நிறுவனங்கள் போன்றவற்றை பற்றி ஆராய்வது, பல்வேறு வகை முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களை அணுகுவது, சட்ட நுணுக்கம் என அனைத்து திசையிலும் எவ்வாறு செயல்பட்டு வெற்றியடைவது என முழுமையாக விளக்குவதோடு , அவர்களை ஊக்கபடுத்தி அடுத்த நிலைக்கு எடுத்து செல்வது

2. கம்பெனிகளில் முதல் நிலையில் சேர்ந்து எவ்வாறு பொருளீட்டுவது

போன்ற பல வாய்ப்புகளை விளக்குவது என்றும் முடிவு செய்யபட்டது. எவ்வாறு இந்த கருத்தரங்கு மூலம் FeTNA2015 மாநாட்டுக்கு பொருளீட்டுவது என்பது பற்றியும் விரிவாக அலசபட்டது.
அதுமட்டுமன்றி Key note speakers,TAP awardee nomination  செய்வது பற்றியும் விவாதிக்க பட்டது.

கூட்ட முடிவில் பொறுப்புகள் தனி பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்க பட்டடது.  சிலிக்கன் வாலியில் நடக்க இருக்கும் FeTNA2015 விழாவில் அனைத்து தரப்பு மக்களையும் தொழில் முனைவோர் forum  கவர்ந்திழுத்து  தனி முத்திரை பதிக்கும்  என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டது.


இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக நடத்த உங்களுக்கு எதுவும் யோசனை இருந்தால் என்ற coordinator@fetna.org  மின்னஞ்சலில் விழா ஒருங்கிணைப்பாளரை  தொடர்பு கொள்ளுங்கள்.

Sunday, October 19, 2014

தொல்தமிழ் கலைகளை அடையாள படுத்தும் பேரவையின் (FeTNA) விழா

FeTNA 2014 விழா பற்றிய நினைவுகளை கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் மணல்வீடு என்ற இதழில் பகிர்ந்துளார்கள். FeTNA 2015 தமிழ் விழா பற்றிய முன்னோட்டமாக இதை பார்க்களாம்.





மணல்வீடு என்ற இதழ் திரு ஹரிகிருஷ்ணா  அவர்களால்  தொன்மையான தமிழ் கலைகளை பற்றிய செய்திகளை வெளி கொணர நடத்தபடும் இதழ் ஆகும்



அழிந்து வரும் இந்த கலைகளை காப்பாற்ற திரு ஹரிகிருஷ்ணா அவர்கள் கூத்து பள்ளி தொடங்கி அடுத்த தலைமுறையினருக்கு இந்த கலையின் வடிவம் மாறாமல் தற்போதைய புகழ் பெற்ற கலைஞர்கள் மூலம் பயிற்ச்சி கொடுக்க முயற்ச்சி எடுத்து வருகிறார். FeTNA 2014 விழா மூலமும்  அதை தொடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு தமிழ் சங்கங்களிலும்  தோல்பாவை கூத்து நடத்தி அமெரிக்க தமிழர்களுக்கும் இங்கு வாழும் குழந்தைகளுக்கும் இந்த அரிய கலையினை பார்த்து ரசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார்.

இந்த அமெரிக்க பயணமானது அவரது கனவு திட்டமான கூத்து பள்ளியை தொடங்குவதற்கு சுமார் $7500 நிதியாக கிடைத்துள்ளது. நமது வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தில் அவர் தோலபாவை கூத்து நடத்தியது நமக்கெல்லாம் பசுமரத்தாணி போல் நினைவில் இருக்கிறது.இந்த உதவியில் வளைகுடா பகுதி தமிழர்களின் நன்கொடையும் குறிப்பிட தகுந்த அளவு உள்ளது என்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் செய்தியாகும்.



வட அமெரிக்க பேரவையின் (FeTNA) தமிழ் விழா இது போன்ற அழிந்து வரும் கலைகளை உயிப்பிக்கவும் உதவுகிறது என்பது இது ஒரு சிறந்த உதாரணம்.
அதுமட்டுமன்றி இது போன்ற கலைஞர்களை பேரவை இந்தியாவிலிருந்து பொருட்செலவு மற்றும் விசா ஏற்பாடு போன்ற பணிகளை செய்து அழைத்து வருவதன் மூலம் பிற தமிழ் சங்கங்கள் அவர்களை தங்களது பகுதிக்கு எளிதில் அழைக்க முடிகிறது. பேரவையின் இந்த அறிய பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துவோம்.


பின் குறிப்பு:
ஹரிகிருஷ்ணாவின் களரி கூத்து பள்ளிக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்

9894605371
9677520060







Sunday, September 28, 2014

FeTNA2015 தமிழ் விழா - வளைகுடா பகுதி தமிழ் மன்றம் வரவேற்கிறது

உலக தமிழர்கள் அனைவரையும் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 2 முதல் 5 வரை நடைபெற உள்ள  FeTNA 2015 தமிழ் விழாவிற்கு  வளைகுடா பகுதி தமிழ் மன்றம் அன்புடன் வரவேற்கிறது.வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின் முந்நாள் மற்றும் இந்நாள் தலைவர்கள், வளைகுடா பகுதியில் இயங்கும் பிற தமிழ் அமைப்புகள்  மற்றும்   கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பணியாற்றிய பேராசிரியர்  போன்றோரின் வறவேற்புரை அடங்கிய காணொளியை பாருங்கள்.


அடுத்த ஆண்டு உங்கள் தமிழ் சொந்தங்களோடு தமிழை சுவாசிக்க தமிழ் விழாவிற்கு வருவதற்கு இப்போதே திட்டமிடுங்கள்

Sunday, September 21, 2014

FeTNA 2015 தமிழ்விழா - அறிமுககூட்டம்

FeTNA 2015 தமிழ்விழா  அறிமுககூட்டம் செப்டம்பர் மாதம் 21ம் தேதி 2014ம் ஆண்டு மாலை 3 மணி முதல் 6 மணி வரை பிரிமாண்ட் நகரம் சென்டர்வில்லெ சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை தலைவர் திரு.நாஞ்சில் பீற்றர் அவர்களும் வாஷிங்டன் தமிழ்சங்கத்தை சேர்ந்த  திரு பாலகன் ஆறுமுகசாமி  அவர்களும் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்துக்கு வளைகுடா பகுதி தமிழ் ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பெருந்திரளாக கலந்து கொண்டனர். .வளைகுடா பகுதி தமிழ் மன்ற தலைவர் திரு சோலை அழகப்பன் அவர்கள் இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார். வாசிங்டன்னிலிருந்து வந்திருக்கும் சிறப்பு விருந்தினருக்கு நன்றி தெரிவித்தார்.இந்த விழாவின் லாபத்தில் ஒரு பங்கு வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின் நீண்ட நாள் கனவாகிய தமிழ் கலாச்சார மையம் அமைக்க செலவிடப்படும் என்பது குறிப்பிட தக்கது.


திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள் முதல் முதலாக பேரவையின் ஆண்டு விழாவை வளைகுடா பகுதியில் நடத்துவதும், தமிழ்நாடு அறகட்டளையுடன் இணைந்து நடத்துவதையும் பேரவையின் வரலாற்றில் ஒரு மைல் கல் என்று கூறினார். இதற்கு முன் நடந்த பெட்னா விழாக்களிலிருந்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.நுணுக்கமான நிதி திட்டமிடல் மூலம் இந்த விழாவை வெற்றி விழாவாக நடத்தலாம் என்று கூறினார்.இதற்கு முன் நடைபெற்ற பேரவை விழாக்களில் மிக பெரியதானது பேரவையின் வெள்ளி விழா என்றும் அந்த விழாவிற்கு 2500 பேர் வந்ததாகவும் , அடுத்த ஆண்டு சிலிக்கன் வாலியில் நடக்க இருக்கும் இந்த விழாவில் அதை விட மிக அதிக மக்கள் கலந்து கொள்ளும் விழாவாக இதை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.விழாவிற்கு  வரும் சிறப்பு விருந்தினர்களை வரவிற்கு ஏற்றவாறு செலவு செய்து தேர்வு செய்து கொள்ளலால் என்றார்.பொதுவாக இந்த விழாவிற்கு வருகை தரவிருப்பமில்லாதவர்களால் பெரும்பான்மையாக கேட்கபடும் கேள்வி சினிமா நட்சத்திரங்களை ஏன் அழைக்க படுகிறார்கள் என்பது தான் எனவும், இந்த நிகழ்ச்சி சினிமா நட்சித்தரங்களுக்காக மட்டும் நடத்த படும் நிகழ்ச்சி அல்ல என்றும் தமிழர்களின் வாழ்வியலில் ஒன்றற கலந்து விட்ட சினிமா துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பல மணி நேர நிகழ்ச்சிகளில் ஒரு சில மணி துளிகளே அவர்களது பங்களிப்பு இருக்கும் என்றும் கூறினார்.இந்த விழாவை வெற்றி விழாவாக நடத்த தன்னால் ஆன அனைத்து உதவியும் செய்வதாகவும் உறுதி அளித்தார்.விழாவிற்கு அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமிலிருந்து வரும் பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்களை சிறப்பாக விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்றும் வளை குடா தமிழ்மக்களிடம் விருப்பம் தெரிவித்தார்.

அடுத்து பேசிய திரு பாலகன் ஆறுமுகசாமி அவர்கள்  வளைகுடா பகுதி மக்களை ஊக்குவிக்கும் படியாக பேரவை விழாவை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்று பேசினார். அமெரிக்காவில் உள்ள தமிழர்களின் ஒற்றுமையின் அவசியத்தையும் , தொடர்ந்து நாம் என்ன செய்யவேண்டும் என்றும் விளக்கினார். விழா மேடையிலேயே $5000 நன்கொடையாக கொடுத்தார்.


அடுத்து பேசிய  விழா ஒருங்கிணைப்பாளர் திரு தில்லை குமரன் அவர்கள் பல்வேறு நன்கொடையாளர் பிரிவு, குடும்ப மற்றும் தனி டிக்கெட் பிரிவு பற்றி விளக்கினார். விழாவை சிறப்பாக நடத்த அமைக்க படும் பல்வேறு குழுக்கள் பற்றி விவரித்தார். விழாவிற்கு வந்தவர்களிடம் தாங்கள் விரும்பும் எந்த குழுவிலும் தன்னார்வலராக சேர அழைப்பு விடுத்தார்.இந்த நிகழ்ச்சியை வெற்றி விழாவாக நடத்த நிதி திரட்டுவதன் அவசியம் பற்றி கூறினார்.திரு ஜெயவேல் முருகன் அவர்கள் $5000  விழா  ஒருங்கிணைப்பாளரிடம்  நன்கொடை அளித்தார்.
பல்வேறு அலுவலங்களில் தாம் அளிக்கும் பணத்துக்கு ஈடாக கம்பெனியும் நன்குடை அளிப்பதால் , இந்த வாய்ப்பு உள்ள அனைத்து அலுவலகங்களிலும் வெலை செய்வோர் அந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்கொடைகளை கொடுக்கும் படியும் கூறினார்.இந்த வருடம் இளைஞர்களை கவரும் விதமாகவும் இளைஞர்கள் பங்களிப்பு அதிகம் இருக்கும் படியும் நிகழ்ச்சிகள் இருக்கும் என்றும் உறுதி அளித்தார். அது மட்டுமின்றி சன் டிவியின் கல்யாண மாலை நிகழ்ச்சியும் இவ்விழாவில் நடைபெறும் என்றும் கூறினார்.

அதை தொடர்ந்து தொழிற்முனைவோர் நிகழ்ச்சி அமைப்பாளர் திரு லேனா கண்ணப்பன் அவர்கள் தொழிற் முனைவோருக்காக நடக்க உள்ள நிகழ்ச்சி பற்றி கூறினார்.இவ்விழாவிற்காக நிதி திரட்டுவதில் இந்த நிகழ்ச்சி முக்கிய பங்காற்றும் என்று கூறினார்.  கூகுள், மைக்ரோசாட், ஆப்பிள், அமேசான் போன்ற நிறுவனங்களின் முக்கிய தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பேச அழைக்க பட உள்ளதாகவும்,  தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி, தமிழ் அமெரிக்க சாதனையாளர்கள் கவுரவிக்கும் விழா , ஸ்டான்போர்டு பல்கலைகழக பேராசியர்கள் உறை என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடல் நடந்து வருவதாகவும் கூறினார்.
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக  Innovative Start Up போட்டியை Venture Capitalist நடுவராக கொண்டு நடத்த பட  உள்ளதாகவும் வெற்றியாளருக்கு தொழில் தொடங்க  Seed Moneyயை Venture Capitalist  பரிசாக கொடுக்கும் படி திட்டமிட்டு வருவதாகவும் கூறி உள்ளார்.


வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின் முன்னாள் தலைவர்கள் இந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.இவ்வாழாவில் சிறப்பான நாடகத்தை திருமதி பகீரதி அவர்கள் நடத்த உள்ளதாக  அறிவிக்க பட்டது. அவர்  பேசும் போது உலக தமிழறிஞர்கள் கூடும் நிகழ்ச்சி வளைகுடா பகுதியில் நடக்க வேண்டும் என்ற கனவு இந்த நிகழ்ச்சியின் மூலம் மெய்பட்டது என்று கூறினார்.


நூறுக்கும்  மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டதால் இந்த சமுதாய கூடம் முழுதும் நிரம்பி வழிந்தது. இதன் மூலம் வளைகுடா பகுதி மக்களின் ஆர்வமும், வேகமும் கொண்டு இவ்விழாவை வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டது.

இவ்விழாவிற்கு தன்னார்வலராக பணி புறிய மற்றும் இவ்விழா பற்றிய தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்ய  coordinator@fetna.org என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.



Sunday, September 14, 2014

FeTNA 2015 வரவேற்பு வீடியோ



FeTNA 2015 வரவேற்பு வீடியோ



 உங்கள் தமிழ் சொந்தங்களோடு உறவாடி தமிழை சுவாசிக்க    2015 ஜூலை 3 - 5 சான் ஹீசே நகருக்கு வருவதற்கு இப்போதே உங்கள் தேதிகளை காலண்டரில் ஒதுக்கி வைத்து கொள்ளுங்கள்.




Saturday, August 9, 2014

வணக்கம்

வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் (FeTNA) 28 வது ஆண்டு விழா வளைகுடா பகுதி தமிழ் மன்றத்துடன் இணைந்து சான் ஹுசே பகுதியில் 2015 ஜூலை முதல் வாரத்தில் நடத்த முடிவு செய்ய பட்டுள்ளது.இந்த விழாவிற்கான ஒருங்கினைப்பாளராக திரு தில்லை குமரன் அவர்கள் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்.இந்த விழா நடத்த தேவையான பூர்வாங்க வேலைகள் நடை பெற தொடங்கி உள்ளது.  இந்த விழா நடத்த செய்ய படும் ஏற்பாடு பற்றியும் அது சம்பந்தமான அறிவிப்புகள் மற்றும் செய்திகளை பகிரவும் இந்த பதிவு தொடங்க பட்டுள்ளது.இந்த விழாவை சிறப்பாக நடை பெற வைக்க வாசகர்களின் கருத்தும் வரவேற்க படுகிறது.